கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய வரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய வரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வையப்பமலை மொஞ்சனூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உரிய அனுமதி இல்லாமல் மண் அள்ளிக்கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அனுமதியில்லாமல் மண் அள்ளக் கூடாது என தடுத்து நிறுத்தினார். இதனை அறிந்த சீனிவாசன் நேற்று இரவு பாலமேட்டில் உள்ள சிவகாமி வீட்டிற்கு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு செய்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜா கூறும் போது பாலமேடு கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதை தடுத்த காரணத்தால் நேற்று இரவு அவரது வீட்டிற்க்கே சென்று சீனிவாசன் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார் இதனால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது போன்ற நபர்களால் அரசு பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பணி பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சிவகாமியை தாக்கிய சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஃபரா(FERA) கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் பங்கேற்று போராடி வருகிறோம் என்று கூறினார். தக்க நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார் போராட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அங்கீத் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனிடையே சீனிவாசன் மீது எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம நிர்வாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story