தவறான தகவலை அளித்து காவலர்களை அலைக்கழித்த இளைஞர் கைது

X
தஞ்சாவூரில் தவறான தகவலை தெரிவித்து காவல் துறையினரை அலைக்கழித்து, வழக்கமான பணியை செய்ய விடாமல் தடுத்த இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யயப்பட்டார். தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை இரவு கைப்பேசியில் பேசிய நபர், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கிராமத்தில் தனது காதலியைப் பார்க்க வந்தபோது, அப்பெண்ணையும், தன்னையும் சிலர் அரிவாளால் வெட்டியதாகவும், தான் தப்பித்து ஓடிக் கொண்டிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறும் கூறினார். இதைத்தொடர்ந்து, இரு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். இதில், தான் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக காவல் துறைக்கு பொய்யான தகவலை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து, தவறான தகவல் அளித்த கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் இளந்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமாரை (23) காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை காலை கோடியம்மன் கோயில் அருகே படுத்திருந்தார். காவல் துறையினரை பார்த்ததும், அவர்களைத் தள்ளிவிட்டு தப்பியோட முயன்றார். அவரை காவல் துறையினர் பிடித்து கைது செய்தனர்.
Next Story

