முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

X
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை 2025-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025(Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் 26.8.2025 அன்று முதல் 10.9.2025 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, முதல் நாளான இன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று(26.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், பள்ளி மாணவிகளுக்கான கைபந்து, கபடி, சிலம்பம் போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் மற்றும் சதுரங்கம் போட்டிகளும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகளும், விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டிகளும், செந்திகுமார நாடார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கிரிகெட் போட்டிகளும், விருதுநகர் ஆரள் விளையாட்டு அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளும், சாத்தூர் சன்இந்தியா பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகளும், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகளும் நடைபெறுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு எப்படி கல்வி முக்கியமோ அது போல உடல் வலிமை மிக முக்கியம். இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும் போது, வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு கவனங்கள் போகாது. எனவே, இளைஞர்கள் எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு உங்களது அறிவையும், உடலையும் தயார்செய்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story

