வல்லம் வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா 

வல்லம் வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா 
X
மரக்கன்றுகள் நடும் விழா 
தஞ்சை அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை மாவட்டத்தில், தஞ்சைக்கு அருகே வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4,743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிகக் கட்டிடங்களும் உள்ளது. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12இல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குப்பைகள் சேகரிக்கப்படும் இடம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கிற்கு வளம் மீட்பு பூங்கா என்று பெயர். ஆனால் எந்த வித துர்நாற்றமும் வீசுவது கிடையாது. சுற்றுலா செல்லும் பகுதியில் உள்ளது போல இந்த பூங்கா உள்ளது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரங்களை மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை என்று நூற்றுக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மாடுகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளம் மீட்பு பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் படியும், பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவுக்கிணங்கவும் நகர்ப்புற பசுமை பிரச்சாரத்தையொட்டி இந்த வளம் மீட்பு பூங்காவில் சனிக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹிம் அபூபக்கர் தலைமையில் வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகர், கவுன்சிலர்கள் சுந்தர்ராஜ், சேகர், அன்பழகன், ஆரிப் பாட்சா, ஆரோக்கியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து வளம் மீட்பு பூங்காவில் மகாகனி, வேம்பு, ஆலமரம், நாவல், புங்கன் என்று பலன் தரும் 250 மரக்கன்றுகள் நட்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை வல்லம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், பதிவறை எழுத்தர் கணேசன், பம்பு மெக்கானிக் பிரகதீஷ் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Next Story