கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம், தரமற்ற அரிசி விற்பனை செய்யப் படுவதாக புகார்

X
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை திட்டத்தின் கீழ் அரிசி, மளிகை பொருட்கள், மசாலா, சோப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சங்கத்தில் உறுப்பினராக உள்ள மதுராந்தகம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து அரிசி வாங்கி, மதுராந்தகம் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி போல உள்ளதாகவும், 'பாலிஷ்' செய்து விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், தரமற்ற அரிசியை விற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்துவதாகவும், விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். எனவே, மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, தரமான அரிசியை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

