கோவை மலையடிவார கிராமங்களில் யானை அட்டகாசம் – போர்கால நடவடிக்கை கோரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி ஆட்சியரிடம் மனு

X
கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் யானைகள் அடிக்கடி புகுந்து மனித உயிரிழப்பு, காயம், நிலங்கள் சேதம் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி, போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கோவை ஆட்சியர் பவன் குமாரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளார். சமீபத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம் பகுதியில் புகுந்த யானை 90 வயது முதியவரை தாக்கி காயப்படுத்தியதையடுத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், வனத்துறையில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், மின்வேலி, உருக்கு கம்பிவேலி, ரோந்து வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார். மேலும், வனப்பகுதிக்குள் உணவு, குடிநீர் வசதிகள் செய்யப்படாததே யானைகள் கிராமங்களில் புகுவதற்கான காரணம் என்றும், அதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு செப்டம்பர் 5, 6 தேதிகளில் ஆய்வுக்கு வர இருப்பதால், மக்களின் கருத்துகளை அரசு முன் வலியுறுத்த மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வேலுமணி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story

