ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

X
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( வயது 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி தனது நண்பருடன் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் நின்று முகம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முகமது இப்ராஹிம் தவறி ஆற்றில் விழுந்தார். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கினார். உடன் வந்த நண்பர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து முகம்மது இப்ராஹிமை தேடினர் . இந்த நிலையில் புதன்கிழமை மாலை தஞ்சை அடுத்த துறையூர் பகுதியில் ஆற்றின் கரையில் முகமது இப்ராஹிம் உடல் ஒதுங்கியது. தகவல் அறிந்து தாலுகா காவல்துறையினர் விரைந்து சென்று முகமது இப்ராஹிம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

