பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சங்கமம் - கருத்தரங்கம் 

கருத்தரங்கம்
தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை வசந்தம் மகாலில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கும்பகோணம், ஸ்கைவின் குழுமம் இணைந்து நடத்திய "தென்னை விவசாயிகளின் சங்கமம்" நிகழ்ச்சியில் "தென்னை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை" பற்றிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்  கை.குமணன் வரவேற்றார். தஞ்சாவூர், தோட்டக்கலை துணை இயக்குநர்  அ.வெங்கட்ராமன், வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா வாழ்த்திப் பேசினர்.   கேரள மாநிலம் காசர்கோடு மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், அனைத்திந்திய ஒருங்கிணைந்த பனை மற்றும் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டம் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் போ.அகஸ்டின் ஜெரார்டு, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,  முதன்மையர் முனைவர். வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் (பொ) மற்றும் பதிவாளர் முனைவர். இர. தமிழ் வேந்தன், தென்னையில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதைப் பற்றியும் தென்னை விவசாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பங்கு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  கும்பகோணம், ஸ்கைவின் குழும நிர்வாக இயக்குநர் மு.மோகன், தென்னையில் கடற்பாசியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தென்னை ரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய தொழில் நுட்ப உரைகள் வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கை.குமணன், நா.முத்துக்குமரன், ம.சுருளிராஜன் ஆகியோரால் வழங்கப்பட்டது. நிறைவாக விஞ்ஞானி ந.செந்தில்குமார்  நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Next Story