கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
X
அரசியல்
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.  தஞ்சாவூரில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேமுதிக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடலூரில் ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில், கூட்டணி குறித்து மிகத் தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இதுதான் பதில். ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை எனவும் சிலர் கூறினாலும், அதுபோன்ற நிலைமை கிடையாது.  தேர்தலுக்கு இன்னும் 7 - 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம். தமிழ்நாட்டில் இதுபோல இத்தனை ஆண்டுகளும் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை.  ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும். வாக்குத் திருட்டு பிகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. இதற்கு நீதியரசர்கள் துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வருகிற தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
Next Story