தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க லேசான தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மங்காபுரத்தில் இட தகராறு காரணமாக ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் இரு தரப்பாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் அருகே உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது தங்கள் வழியாக ஊர்வலம் செல்வதை ஏற்க மறுத்து மற்றொரு தரப்பினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் பொதுமக்களுடன் சமரசம் பேசினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆய்வாளர் ராஜேஷ் தனது வாகனத்தில் இருந்த லத்தியை எடுத்து லேசான தடியடி நடத்தி திரண்டு இருந்த கூட்டத்தை கலைத்தார். அப்போது காவல்துறையினரிடம் இருந்து லத்தியை பிடுங்க முயன்றபோது இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி பஸினா பீவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

