கிராம மக்கள் சாலை மறியல்

X
கள்ளக்குறிச்சி தாலுகா, பானையங்கால் கிராமத்தில் பொன்னியம்மன், செல்லியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இக்கோவிலில் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.அதன்படி, நாளை 15ம் தேதி இரவு அதிசய விளக்கு என்ற நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். இதில், பானையங்கால் மட்டுமின்றி சேலம், எடப்பாடி உள்ளிட்ட வெளி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்று, ஆடுகள் படையலிட்டு சுவாமி வழிபாடு செய்வர். இத்திருவிழா நடத்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பானையங்கால் கிராமத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னை நிலவியது. இதில் சுமூக தீர்வு கிடைக்காததால், மீண்டும் பேச்சு வார்த்தை நேற்று மாலை நடந்தது. இதில், திருவிழா நடத்தக்கூடாது என தாசில்தார் பசுபதி தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 7.20 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், கலைந்து செல்லாததால் இரவு 7.30 மணிக்கு, மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
Next Story

