எழுதி வைத்து படிக்கும் விஜய்- யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது

தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.
டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வில் முறைகேடு நடக்க யார் காரணம் : தமிழக அரசுக்கு சீமான் கேள்வி பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வி தான அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. ஆங்கிலத்தில் வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும். தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்து காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன். விஜய் வந்து சென்றதால் இந்த இடத்தை தேர்வு செய்யவில்லை. அரசியல் தலைவர்கள் சுற்று பயணம் மேற்கொள்கின்றனர். நான் ஏன் சுற்று பயணம் மேற்கொள்ளவில்லை என்று கேட்கின்றனர். தமிழ்நாட்டில் எனக்கு தெரியாத ஊர்களே இல்லை. எங்கு மக்கள் பிரச்சினை இருந்தாலும் அங்கு நான் நிற்பேன். அதனால் எனக்கு சுற்று பயணம் தேவையில்லை. தவெக தலைவர் விஜய் என்னை விமர்சித்தார். நான் அவரை விமர்ச்சிக்கவில்லை. அவரது கொள்கை, கோட்பாடு என்ன என்பதை தெரிவிக்ககோரி நான் கேள்வி தொடுக்கிறேன். அதற்கு விஜய் பதில் கூறவேண்டும். ஆனால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. குறைகூறுவதாக குற்றம் சாட்டுகிறார். அரசியலுக்கு வந்த பின்னர் அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும். ஆனால் எழுதி வைத்து படிக்கும் விஜய்- யால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார்.
Next Story