மாரத்தான் போட்டிக்கான சின்னம் வெளியீடு
தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தீபா சில்க்ஸ் இணைந்து நடத்தும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வருகிற 12- ம் தேதி தர்மபுரியில் நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போட்டிக்கான சின்னம் வெளியிடும் விழா தர்மபுரி டி.என்.சி. சிட்ஸ் நிறுவன வளாகத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டப் பத்தயத்துக்கான சின்னத்தை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளரும், தொழிலதிபருமான டி.என்.சி. இளங்கோவன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னிலை வகித்தார். இதில் ரோட்டரி எலைட் சங்க தலைவர் டாக்டர் மணிமாறன்,, செயலாளர் ஜீவன், பொருளாளர் ராஜா கிருஷ்ணன், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன், தீபா சில்க்ஸ் இயக்குனர் தியாகராஜன், ஏ.வி.சி.-டி.வி.எஸ். உரிமையாளர் அருள் மற்றும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இளைய சமுதாயம் போதைப் பழக்கத்திற்கு எதிராக கைகோர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து 3க- வது ஆண்டாக நடைபெறும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள ரூ.199 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ. 149 செலுத்த வேண்டும். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 8-ம் தேதிக்குள் www.rcdharmapurielite.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story



