காங்கேயத்தில் கார் - பைக் மோதி விபத்து தாய் பலி.சிசிடிவி காட்சி வைரல்

காங்கேயத்தில் கார் - பைக் மோதி விபத்து தாய் பலி.சிசிடிவி காட்சி வைரல்
X
காங்கேயத்தில் கார் - பைக் மோதி விபத்து தாய் பலி. தந்தை,மகள் படுகாயம் - சிசிடிவி காட்சி வைரல் 
காங்கேயம் சென்னிமலை சாலையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 46). இவர், வீட்டின் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீலாதேவி (35). இவர்களது மகள் இனியா (16). நேற்று முன்தினம் இரவு, இவர்கள் 3 பேரும், ஓட்டலில் இருந்து கடைவீதிக்கு பைக்கில்  சென்றனர்.பைக்கை ராஜமாணிக்கம் ஓட்டினார். பின்னால் மனைவி மற்றும் மகள் அமர்ந்து இருந்தனர். இவர்களது பைக் காங்கேயம்-சென்னிமலை சாலையை கடக்கும் போது, அந்த வழியாக வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள், அவர்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சீலாதேவியை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ராஜமாணிக்கம், இனியா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தினேஷ்குமார் (30) என்பவர் மீது காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காங்கேயம் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
Next Story