தவெக தலைவர் விஜய் பாஜக அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை?
நாகையில், சீத்தாராம் யெஞ்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில், கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசு அளித்திருப்பதாக கூறியுள்ளார். ஒரு சிறிய அளவிலான வரி குறைப்புக்கு மத்திய அரசு இவ்வளது தம்படம் அடிக்க வேண்டியது இல்லை. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக வரி உயர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு செவிசாய்க்காமல் வரிகளை உயர்த்தினார். கடந்த ஓராண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரியின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.22 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்றால், கடந்த 11 ஆண்டுகளாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தற்போது ரூ.46 ஆயிரம் கோடி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வரி குறைப்பு நேரடியாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டு மக்கள் மீது உணமையான அக்கறை இருக்குமென்றால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இதன்படி கொண்டு வரப்பட்டால் மக்களுக்கு தற்போதைய விலையில் பாதி விலையில் கிடைக்கும். . மேலும், காசா மீதான இஸ்ரேல் இனவெறி தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. ஆனால், இந்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. காசா மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்ட்டு வருகிறது. இது மனிதாபிமானமற்ற செயல். எனவே, இஸ்ரேலுக்கு உடனடியாக வெடிபொருள்கள் அனுப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், தவெக கொள்கை என்ன? ஆணவப்படுகொலைகள், ஜாதிய தாக்குதல்கள் ஆகியவற்றில் தவெக நிலைப்பாடு என்ன என்பதை விஜய் வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இதையெல்லாம் கூறாமல், திமுக ஆட்சியை மட்டுமே விமர்சிக்கும் விஜய் பாஜக அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை. தமிழகத்துக்கு நிதி மறுப்பது, திட்டங்களை கிடப்பில் போடுவது இவற்றுக்கு எதிராக விஜய் எப்போது குரல் கொடுத்தார். பாஜக குறித்து விஜய் மெளனம் சாதிப்பது ஏன்? அதே நேரத்தில் தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை தமிழக அரசு மறுப்பது சரியல்ல. தூய்மைப் பணிகள் உள்ளிட்டவற்றை தனியாருக்கு கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story




