மாபெரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

மாபெரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
X
நாமக்கல் மாவட்டத்தில் 27.09.2025 அன்று நடைபெறவுள்ள “மாபெரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி” மற்றும் முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு !
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், எதிர்வரும் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்த்தல், விற்பனை செய்தலை தடுத்தல், பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த 01.01.2019 முதல் “ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழ்நாடு அரசு மூலம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழிப் பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 25.01.2025 அன்று மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 2025 ஜனவரி முதல் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை சேகரித்தல், அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, குமாரபாளையத்தில் வருகின்ற 27.09.2025 அன்று மாபொரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், பொது மக்கள் அனைவரும் எதிர்வரும் விழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அவற்றிற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களான மஞ்சப்பை போன்றவற்றை பயன்படுத்தலாம். மாபொரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாமினை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நெகிழி பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தொடர்ந்து நெகிழி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் டி.செல்வகணபதி, மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு உறுப்பினர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள், குறு, சிறு, நடுத்தர வணிக சங்க பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story