கேக் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர்ஆய்வு செய்து கடை அடைப்பு

குமாரபாளையத்தில் கேக் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கடையை  அடைத்தனர்.
குமாரபாளையம் சேலம் சாலையில்  ஜே.கே.கே. பங்களா எதிரில் கேக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்பட்ட கேக் , மற்றும் இதர உணவு பொருட்கள் சுகாதாரமான முறையில் இல்லாமல், காலாவதியான, கெட்டுபோன பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் புகார் கூறினார்கள். இதையொட்டி குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன், பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆகியோர், இந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு வைக்கபட்டுள்ள உணவுப்பொருட்களை ஆய்வு செய்து, கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்திரவின் பேரில் இந்த கடை அடைக்கப்பட்டது. விசாரணை முடியும் வரை கடையை திறக்கக் கூடாது என எச்சரித்து சென்றனர். கடந்த சில மாதங்கள் முன்புதான் இதே கடையில், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக கண்டறிந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story