கப்பல் கட்டும் தளம் : உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு!

X
தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வலியுறுத்தி வருகிற 18-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட இருக்கிறது, இதற்கு அப்பகுதியில் உப்பள தொழில் செய்து வரும் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். முதலில் உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் சார்பாக எல்.ஆர். சிவாகர் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வைத்தார், அதில் உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் கையெழுத்திட்டனர். பின்னர் உற்பத்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து உப்பள தொழிலை பாதுகாக்க ஆதரவு கோரினர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து தூத்துக்குடி வந்த மத்திய கப்பல் துறை அமைச்சர சர்பானந்தா சோனோவால் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து உப்பளத் தொழில் பாதுகாக்க கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவும் உப்பளத் தொழிலை பாதுகாக்கவும் வலியுறுத்தி வருகிற 18-ம் தேதி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொழிற் சங்கம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவை நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர். கூட்டத்தில் நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சேகர், பொன்ராஜ்,சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், ராஜபாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவாகர், உப்பளத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, பொன்ராஜ், பரமசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

