கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

X
கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்துக்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கெனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியை தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களை பேசுவதன் அவசியம் என்ன? இது, அந்தக் குழுவின் கருத்துகளை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? ஆனால், ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை. அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்த கொடூர சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்து கொள்வதுதான். மேலும், உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று பழனிசாமி கூறியுள்ளார். தங்கம் தென்னரசு பதில்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை, அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இந்தத் துயர்மிகு சம்பவத்திலில் இருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும்போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை எடப்பாடி பழனிச்சாமி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
Next Story

