அரியலூர் மாவட்ட காவல் துறையின் பொய் செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுப்பு.

X
அரியலூர், அக்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் நடத்திய பொது பாதை மீட்பு போராட்டம் குறித்து அரியலூர் மாவட்ட காவல் துறை தவறான செய்தி வெளியிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தனது மறுப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டுபிரிங்கம் பாலக்கரை கிராமத்தில் பாதை கேட்டு அவ்வூர் பொதுமக்களுடன் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 23.9.2025 அன்று அரியலூர் அண்ணாசிலை அருகில் பாதை கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, , கே.கிருஷ்ணன், துரைஅருணன், மூத்த தோழர் சிற்றம்பலம், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட நூற்றூக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போதும் எந்தவித அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்திட வருவாய் துறை முன்வரவில்லை. அன்றே மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து மீண்டும் மனு கொடுத்தனர். வருவாய் துறை நீதிமன்ற உத்தரவை மட்டுமே காரணம் காட்டி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை அலைகழிப்பு செய்து வந்தனர். இந்நிலையில் தான் கடந்த 03-09-2025 அன்று பாதை மீட்கும் போராட்டம் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் தலைமையில் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அவ்வூர் பொது மக்களும் முடிவு செய்து 10 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வெளியிட்டனர்.அந்த கட்டத்தில் கூட வருவாய் துறையோ,காவல் துறையோ பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. அவ்வாறு பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தால் பிரச்சனையை சுமூகமாக முடித்திருக்க முடியும். வருவாய்த்துறையும்,காவல் துறையும் பார்வையாளராகவே இருந்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த பின்னணியில் தான் கடந்த 3-ம் தேதி திட்டமிட்டப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவ்வூர் பொது மக்களும் இணைந்து பொது பாதையை மீட்பதற்காக ஊர்வலமாக வந்த போது நூற்றூக்கும் மேற்பட்ட காவல்துறையினர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஊர்வலத்தை தடுத்து பெண்களையும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களையும் தாக்கினர்.இதில் அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியனின் சட்டை கிழிந்து அந்த இடத்திலேயே விழுந்து விட்டார். காவல்துறையும், ஆக்ரமிப்பாளரின் குடும்பத்தினரும் சேர்ந்து தாக்கியதில் மூன்று பெண்கள் படுகாயமடைந்து 108 மூலம் அழைத்து செல்லப்பட்டு அரசு மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சையில் இருப்பவர்களிடம் இதுவரையிலும் வாக்குமூலம் பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்யப்படவில்லை இது போலீசாரின் மெத்தன போக்கை காட்டுகிறது அதன் பிறகும் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் மாநில தலைவர் மற்றும் மாவட்ட தலைவர்களை அடித்து தள்ளி வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.இது குறித்த முழுமையான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் மறைத்து மாவட்ட காவல் துறை எதுவுமே நடக்காதது போல ஒரு பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.இது உண்மைக்கு புறம்பானது. முழு பூசணிக்காய்யை சோற்றில் வைத்து மறைப்பது போன்ற காவல்துறையின் இந்த பொய் செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறுப்பு தெரிவிக்கிறேன் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

