சாலை பணிக்கு பூமி பூஜை ஒன்றிய செயலர் நாச்சிமுத்து பங்கேற்பு

குமாரபாளையம் அருகே சாலை பணிக்காக நடந்த பூமி பூஜை விழாவில் ஒன்றிய செயலர் நாச்சிமுத்து பங்கேற்றார்.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் அதிக அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்பவர்கள் உள்ளனர். வயதான நபர்களும் பலர் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள தார் சாலை முற்றிலும் பழுதாகி, பல்லாங்குழி போல், டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.  இந்த சாலையில் தினமும் சென்று வருவதால், பலருக்கு முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு காயமடையும் நிலையும் தொடர்ந்து வருகிறது. அவசரமாக செல்வதானால் முடியாத ஒன்றாக உள்ளது. யாருக்காவது உடல்நிலை மோசமானால், ஆம்புலன்ஸ் கூட இந்த சாலை வழியாக வர முடியாது. ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிந்ததால், அதிகாரிகள் வசம் இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை  புகார் கொடுத்ததும் பலனில்லை. பி.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகள் புகார் வந்த பின் கூட வந்து பார்ப்பது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  இப்பகுதி பொதுமக்கள் இனியும் பொறுப்பது இல்லை எனவும், சாலை புதிதாக அமைக்க தாமதம் செய்தால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தனர். இந்த தகவல் ஒன்றிய செயலர் நாச்சிமுத்து கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது நடவடிக்கையின் பேரில், மாவட்ட செயலர் மூர்த்தி வழிகாட்டுதலில் இந்த காந்திநகர்  சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமையில் நடந்தது.  மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் ,  தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலுமணி , ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் சௌந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story