இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

தருமபுரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி சென்ற கொள்ளையன் கைது-அவரிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
தருமபுரி நகர் பகுதியில் அரசு மருத்துவமனை, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சந்தப்பேட்டை, தபால் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து, இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்திருந்தது. இதனை எடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தனிப்படை அமைத்து, காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவலர்கள் நகர்ப்பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை பகுதிகளில் இருசக்கர வாகனங்களை, ஒரே நபர் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து தருமபுரி, காவல் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினரிடம் இணைந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் நபர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற குற்றவாளி, கிருஷ்ணகிரியை சேர்ந்த அக்பர்(எ) திலீப் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இன்று காவலர்கள் அக்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் தொடர்ந்து 25 இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் திருடி சென்றதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story