மாவட்ட எல்லை பாதுகாப்புக்கு டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |1 Nov 2025 9:11 PM ISTமாவட்ட எல்லை பாதுகாப்புக்கு டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முயற்சியினால் குமாரபாளையம் தாலுக்கா துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைய, முன்னாள் நகராட்சி தலைவர் சேகர் தலைமையில் அனைத்து கட்சியினர் ஓரணியில் திரண்டு, வலியுறுத்தியதன் பேரில், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில் 2016, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2024, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. குமாரபாளையம் பொதுமக்கள் நீதிமன்ற பணிகளுக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் சென்று வந்த நிலையில், 2020, ஜூலை, 18ல் குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. தற்போது டி.எஸ்.பி. அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. ஆனால், டி.எஸ்.பி. அலுவலகம் பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து அனைத்து கட்சியினர் ஒன்று சேர்ந்து, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வசம் மனு கொடுத்து, டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். விஜய்கண்ணனும், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இது குறித்து அனைத்து கட்சியினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் குமாரபாளையம் நகரம் உள்ளது. டி.எஸ்.,பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைந்தால்தான், மாவட்ட எல்லைப்பகுதி பாதுகாப்புக்கு உகந்ததாக அமையும். தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், குமாரபாளையத்தில் அமைந்த நிலையில், டி.எஸ்.பி. அலுவலகமும் இங்கு அமைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேகர், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, காங்கிரஸ் நகர செயலர் ஜானகிராமன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். ஆறுமுகம், பா.ம.க. நிர்வாகி சவுந்திரராஜன், தி.க. நகர செயலர் சரவணன், பெரியார் திராவிட கழகம் நிர்வாகி சுவாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் நகர செயலர் பிரபு உள்பட பலர் பங்கேற்று நகராட்சி தலைவரிடம் மனு வழங்கினர்.
Next Story
