மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியரை போக்சோவில் கைது செய்த போலீசார்

X
Thanjavur King 24x7 |12 Dec 2025 9:38 PM ISTபாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். மேலும் கபிஸ்தலத்தில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர், டிச.12- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.முருகன் (35). தற்போது கும்பகோணம் அருகே மாதுளம்பேட்டை பகுதியில் தங்கி உள்ளார். இவர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். மேலும் கபிஸ்தலத்தில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தன்னிடம் டியூசன் படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி தனது பைக்கில் ஏறுமாறு கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி இதுகுறித்து தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் ஆசிரியர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் சிறுமிக்கு ஆசிரியர் முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
