தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தின் அரசுப் பணியாளர்களுக்கு கணினித்தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், சட்டம், வரலாறு, அரசாணைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.இப்பேரணியானது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவுற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா. பிரகாஷ், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி, பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் எனச் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.


