திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!!

நாகை மாவட்டம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், பசுமை பள்ளி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, சாட்டியக்குடி சாலை வரை நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் – மக்கா குப்பை பிரித்தல், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி, கையில் பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியை திருக்குவளை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை கோ. ஜெய்குமாரி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ்ஆனந்தன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் கே. சரவணன், பசுமை பள்ளி பொறுப்பாளர் ஆர். தியாகசுந்தரம், ஆசிரியர்கள் அருண், தேசிய பசுமைப்படை ஆசிரியர் கணேசன், ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் சிவசக்தி, ஆசிரியைகள் அழகு, இந்திரா உள்ளிட்டோர் மற்றும் முதல் நிலை காவலர்கள் சக்தி, கணேஷ், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
