புஞ்சை புளியம்பட்டியில் ரூ 1 கோடிக்கு ஏலம் போன ஆடு மாடுகள்

ரூ 1 கோடிக்கு ஏலம் போன ஆடு மாடுகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள புஞ்சை புளியம்பட்டி வார சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று நடைபெற்ற சந்தைக்கு, 20 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 60 கன்றுகள் 100ஜெர்சிரக மாடுகள் மற்றும் சிந்து, நாட்டு மாடு உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 15ஆயிரம் முதல் 25ஆயிரம் ரூபாய், கலப்பின மாடு 18ஆயிரம் முதல் 35ஆயிரம் ரூபாய், ஜெர்சி 20 ஆயிரம் முதல் 48 ஆயிரம், சிந்து 12ஆயிரம் முதல் 41ஆயிரம், நாட்டு மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை விற்பனை ஆனது. வளர்ப்பு கன்றுகள் 5,000 முதல், 12 ஆயிரம் வரை விற்பனையானது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெள்ளாடு ஒன்று 8000 ரூபாய் வரையும், செம்மறி ஆடுகள் 7000 ரூபாய் வரையும் விற்பனையானது. ஆடுகள் 20 லட்சம் மதிப்பில், மாடுகள் 80 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story