பேராவூரணி அருகே அறநிலையத்துறை சார்பில் திருமணம்... ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலம், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், திருக்கோயில்களின் சார்பில், பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, ஆத்தாளூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மணமகள் ர.சினேகாவுக்கும், மருங்கப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அ.ஹரிகரனுக்கும் திருமணம் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தி வைக்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, மங்கலநாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருக்கோயில் அறங்காவலர்கள் முடப்புளிக்காடு க.அன்பழகன், களத்தூர் ராமராஜன், தென்னங்குடி எல்.வி.அசோகன், கழனிவாசல் செ.கவிதா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4 கிராம் திருமாங்கல்யம் மற்றும் கட்டில், மெத்தை, தலையணை, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம், குத்து விளக்கு, பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் அறநிலையத்துறை சார்பில் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் செயல் அலவலர்கள் அருண்பிரகாஷ் (பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம்), விக்னேஷ் (பாளத்தளி அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்), தென்னங்குடி ராஜா, முடப்புளிக்காடு ஆனந்தன், குழ.சரவணன், குருவிக்கரம்பை ராமமூர்த்தி, மற்றும் மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தை வைரவன் குருக்கள் நடத்தி வைத்தார். தொடர்ந்து உறவினர்கள், பொதுமக்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் எம்.ராஜசேகரன் மேற்பார்வையில், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story



