காஞ்சியில் பாதாள சாக்கடை திட்டத்தால் 100 சாலைகள்... 'கண்டம்'

காஞ்சிபுரம் மாநகராட்சியின் விரிவாக்க பகுதியாக ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு ஆகியவை சேர்க்கப்பட்டன. மாநகராட்சியுடன், விரிவாக்க பகுதிகளுக்கும் சேர்த்து 254 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 51 வார்டுகளில் முதற்கட்டமாக 11 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தும் பணி நடக்கிறது. அதிலுள்ள 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 180 கி.மீ., துாரத்திற்கு குழாய் புதைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கழிவுநீர் செல்ல, தெருக்களின் நடுவே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதன் பின் சாலையை சீரமைக்காததால், பெரிய பள்ளங்கள் ஏற்படுவதோடு, சேறும் சகதியுமாக சாலைகள் மாறியுள்ளன. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் 100க்கும் மேற்பட்ட தெருக்களிலும் இந்த நிலையே உள்ளது. தவிர, சாலையின் நடுவே, 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு தொட்டிகள் அமையும் இடங்களிலும், சாலை படுமோசமாக மாறியுள்ளன. இதனால், குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடிவதில்லை. மழை பெய்தால் சாலையின் நிலை முழுதும் சகதியாக மாறிவிடுவதால், நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயம், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைகின்றனர்.
Next Story

