ரூ 100 கோடி நில மோசடி- எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.
Karur King 24x7 |2 Sep 2024 5:02 PM GMT
ரூ 100 கோடி நில மோசடி- எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.
ரூ 100 கோடி நில மோசடி- எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரருக்கு 10 நாள் நீதிமன்ற காவல். கரூரில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி, எம்.ஆர்.சேகர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய பிறகு 10-நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நூறு கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகர் கைது செய்யப்பட்டு கரூர், திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் அழைத்து வரப்பட்டார். அவருடன் சேர்த்து அதிமுக தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் செல்வராஜையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரிடமும் நடைபெற்ற விசாரணை முடிந்து, எம்.ஆர்.சேகர் மற்றும் அதிமுக தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் செல்வராஜ் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு பிறகு 10 நாட்கள் நீதிமன்ற சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் கரூரில் உள்ள கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போதிய இடமில்லாததால் திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
Next Story