நாமக்கல்: தேசிய மக்கள் நீதிமன்றம் 1,049 வழக்குகளுக்கு தீா்வு!
Namakkal King 24x7 |15 Sep 2024 12:04 PM GMT
தேசிய மக்கள் நீதி மன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குருமூர்த்தி தலைமை வகித்தார் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும் விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 1,049 வழக்குகளில் ரூ. 16.70 கோடி மதிப்பில் சமரசத்தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு ஒருங்கிணைந்த கோர்ட்டுகளிலும், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய கோர்ட்டுகளில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதலாத்) நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குருமூர்த்தி தலைமை வகித்து, வழக்கு விசாரணைகளை மேற்கொண்டார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நீதிபதிகள் முனுசாமி, தங்கமணி, பிரவீனா, பிரபாசந்திரன், விஜயகுமார், மோகனபிரியா ஆகியோர் விசாரணை செய்தனர். அதேபோல்,ராசிபுரம், பரமத்தி,திருச்செங்கோடு,சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களிலும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன. இந்த தேசிய நீதிமன்றங்களில், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், வங்கி செக் தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.இங்கு, நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சமரச முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற லோக் அதாலத்தில், ஒரே நாளில் மொத்தம் 2,239 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 1,049 வழக்குகளில், ரூ.16 கோடியே 70 லட்சத்து, 9,141 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. லோக் அதாலத் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. வழக்குகளுக்கு செலுத்தப்படும் கோர்ட் கட்டணம், முழுமையாக திருப்பிப் பெற வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படுவது மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதலாத்)சிறப்பம்சம்.
Next Story