சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது

X

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11.04.2025 அன்று சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, WAY 2 NEWS, RK MOTORS, PAYTM, ANAAMALAIS TOYOTA போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 11.04.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. மேலும், இம்முகாமில் பாரத பிரதமரின் தொழிற் பயிற்சி திட்டத்திற்கான பதிவு முகாமும் இணைந்து நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிலக பயிற்சியும், வருடம் ஒரு முறை மானியமாக ரூ.6000- மற்றும் மாத ஊக்கத் தொகையாக ரூ.5000- வழங்கப்படும். இத்திட்டத்தில், சேர விருப்பமுள்ள 21 முதல் 24 வரை வயதுடைய மற்றும் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்;த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விபரங்களுக்கு https://pminternship.mca.gov.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story