போதமலையில் 14 கி.மீ மலைப்பாதையில் சென்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

போதமலையில் 14 கி.மீ மலைப்பாதையில் சென்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி.
X
தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) ககன்தீப் சிங் பேடி, இராசிபுரம் வட்டம், போதமலையில் உள்ள வடுகம் முதல் கீழூர் வரை 14 கி.மீ மலைப்பாதையில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், இராசிபுரம் ஆகிய ஒன்றியங்களில் ரூ.139.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழூர் ஊராட்சி, கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. இவ்வூராட்சியில் 1,727 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்கள் (Particularly Vulnerable Tribal Groups) வாழ்ந்து வருகின்றனர். இவ்வூராட்சிக்கு சரியான சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இம்மக்களின் துயர்துடைக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 18.02.2024 அன்று நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போதமலையில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய தினம் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) ககன்தீப் சிங் பேடி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், போதமலை கீழுர்-மேலூர் மற்றும் கெடமலையில் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் தடுப்பு சுவர், குழாய் பாலம், கான்கிரீட் பாலம் மற்றும் மண்சாலை பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் பொதுமக்கள் விபரம், சாலை பணிகள் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, மலைவாழ் மக்களுடன் கலந்துரைடியானார். மேலும், மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, கலைஞர் கனவு இல்லம், பள்ளிகள், நியாயவிலைக்கடை, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நூலகம் மற்றும் தடுப்பணை ஆகியவை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். முன்னதாக, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலாம்பட்டி ஊராட்சியில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நர்சரியில் ரூ.6.08 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் வீட்டு கழிவுகளை தரம் பிரித்து, மண்புழு உரம் தயாரிக்கும் மண்புழு கொட்டகையினையும், வடுகம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.பிரபாகரன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story