தஞ்சாவூர், இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட 1.50 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

X
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா ? என அதிரடி சோதனையிலும் ஈடுபடுகின்றனர். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவுப்படி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தல்படி, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு அலுவலர்கள் ராமச்சந்திரன், ஜோசப் சேவியர், ரமேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் பொன்னர், எபின் சுரேஷ் மற்றும் அலுவலர்கள், பழைய ராமேஸ்வரம் சாலை, நம்பர் 1 நாகை சாலை, கீழவாசல் வாடிவாசல் கடைத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் கீழவாசல் மீன்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மீன் கடைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி, மீன்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகிறதா ? எனவும், பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா ? என ஒவ்வொரு இறைச்சி கடைகளாக சோதனை செய்தனர். இதில் 25-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து மொத்தம் 1.50 டன் பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதத் தொகை உயர்த்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் இறைச்சிகளை பாத்திரங்களில் வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Next Story

