சிவகங்கையில் ரூ. 17,256.15 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

சிவகங்கையில் ரூ. 17,256.15 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
சிவகங்கை மாவட்டம், வங்கிகள் மூலமாக ரூ. 17,256.15 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வங்கியாளர்களுக்கான கூட்டத்தில், 2024-25 நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு, தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 17,256.15 கோடி கடன் 2024-25 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. ஒன்றிய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.13374.39 கோடியும், தொழிற்துறைக்கு ரூ.1437.40 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ. 207.35 கோடியும் மற்றும் இதர துறைகளுக்கு ரூ.2237.01 கோடியும் என ஆக மொத்தம் ரூ.17,256.15 கோடி கடன் வழங்க இலக்கு வகுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். முன்னதாக, கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட காரைக்குடி மண்டலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மண்டல மேலாளர் செல்வநாதன் பெற்றுகொண்டார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்பிரான்சிஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் பிரவின்குமார், பொது மேலாளர்கள் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, ரிசர்வ் வங்கி தலைமை மாவட்ட பொறுப்பாளர் ராதா கிருஷ்ணன், நபார்ட் வங்கியின் மாவட்ட மேலாளர் அருண் மற்றும் அனைத்து வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story