தொழிலாளி கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது 

தொழிலாளி கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது 
சுசீந்திரம் அருகே
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (50). தொழிலாளி. கடந்த 7- 11-  2022 அன்று அந்தப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை.       இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். கொலை நடந்த அன்று அந்த பகுதியில் நின்ற  பைக் தொடர்பாக விசாரித்த போது,  அந்த பைக் புத்தேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜன் என்பவரிடம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர்.       இந்த நிலையில் நாகராஜன் புத்தேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நாகராஜனை கைது செய்து, போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.       விசாரணையில் குடிபோதையில் திட்டியதால் ராஜதுரையை  தாக்கியதாகவும்,  அதில் அவர் இறந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story