பஸ்களில் திருடிய 2 பேர் கைது

பஸ்களில் திருடிய 2 பேர் கைது
கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மோட்டல்களில் பயணிகள் உணவு சாப்பிட பஸ்கள் நின்று செல்வது வழக்கம். பஸ்களில் இருந்து பயணிகள் சாப்பிட செல்லும் சமயத்தில், பஸ்சில் அவர்கள் பைகளில் உள்ள நகை, லேப்டாப் மொபைல் போன் உள்ளிட்டவை திருடு போவது வழக்கமாக இருந்தது. இதுகுறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கெடிலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே மாருதி ஆல்டோ காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருச்சி அடுத்த கல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் சிவா (எ)சிவகிஷன்,21; முகேஷ் மகன் சுதர்சன்,20; எனவும்; இருவரும் திருச்சி டோல்கேட் பகுதியை சேர்ந்த இருவருடன் சேர்ந்து நெடுஞ்சாலை மோட்டல்களில் நிற்கும் பஸ்களில் ஏறி, பயணிகளின் உடமைகளை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து 80 கிராம் நகைகள், 2 லேப்டாப், திருடுவதற்கு பயன்படுத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story