அயோத்தியாப்பட்டணம் அருகே 2 பெண் என்ஜினீயர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

X
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காலமேகம். அவருடைய மகள் பவித்ரா (வயது 27). இவர் பி.இ. முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவித்ரா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அயோத்தியாப்பட்டணம் 6-வது மைல் சிந்தாமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் மீனா(24). பி.இ. படித்துள்ளார். இவருக்கும், கூட்டத்துப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (27) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிப்பட்டி போலீசார் விரைந்து சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

