பல்லடம் அருகே ஜீப் மோதி 2 பேர் பலி பெண் படுகாயம்

X
பல்லடம் அருகே ஜீப் மோதி 2 பேர் பலி பெண் படுகாயம் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 53). தூத்துக்குடியை சேர்ந்தவர் கணேசன் (57). திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த கொண்டப்பனின் மனைவி பூங்கொடி (45). இவர்கள் 3 பேரும் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் இவர்கள் 3 பேரும், மொபட்டில் சித்தம்பலத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம்- உடுமலை சாலையில் வந்த போது, பின்னால் வந்த ஜீப் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில், மொபட்டில் இருந்த 3 பேருக்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாரிச்சாமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். பூங்கொடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

