அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்

X
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர், அருமுளை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சிக் குழு அறக்கட்டளை" ஒன்றை உருவாக்கி, செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான பொன்.கோவிந்தராஜ் (80), பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ், அண்மையில் பள்ளியில் நடந்த சுதந்திர விழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். பள்ளிக்கு தானமாக இடம் வழங்கிய அவரை பலரும் பாராட்டினர்.
Next Story

