ராசிபுரம் நகர பாஜக சார்பில்,“இல்லந் தோறும் மூவர்ணக் கொடி- 2025 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி ..

X
Rasipuram King 24x7 |13 Aug 2025 7:46 PM ISTராசிபுரம் நகர பாஜக சார்பில்,“இல்லந் தோறும் மூவர்ணக் கொடி- 2025 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி ..
சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பாஜக சார்பில்,“இல்லந் தோறும் மூவர்ணக் கொடி- 2025 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடத்தப்பட்டது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய பேரணி ராசிபுரம் நகராட்சி அலுவலகம் வந்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் அவர்கள் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ஆட்சியின் நிறைவு காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். ஆனால், தமிழக மக்கள், இனி ஆட்சிக்கு யார் வேண்டுமென்பதை விட யார் கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ளார்கள். இந்த முறை ஆட்சிப் பொறுப்பில் திமுகவை அமர வைக்கக்கூடாது என்ற உணர்வோடு தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாமல், கட்சி மற்றும் கூட்டணி பலத்தை நம்பி, தமிழக முதல்வர் பொதுவெளியில் பேசி வருகிறார். பாஜக-அதிமுக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரும். அதிமுக தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். நாடு முழுவதும் பிரதமர் மோடி நல்லாட்சி தருவதுபோல, தமிழகத்திலும் நல்லாட்சி வரும். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுதான் கூட்டணி அமைத்துள்ளோம். பொதுவாக ஒரு தேர்தல் முடிந்த பிறகு தான், முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையத்தை குறை கூறுவார்கள். ஆனால் இப்போது தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது இதன்மூலம் தெரிகிறது. ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையை எதிர்த்து பேசுவது என்பது எதிர்காலத்தில் ஜனநாயகத்தை தவறான பாதையில் நடத்துவதற்கு வழிவகை செய்து விடும். நரேந்திர மோடியின் செயல்பாடுகள், மத்திய அரசின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் தான் திமுக நேரடியாக மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கிறது. வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன என்றார்.
Next Story
