உலக சாதனை நோக்கில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநல சொற்பொழிவு – கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் சிறப்புவிழா !

X
உலக மனநல தினத்தை முன்னிட்டு கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநல சொற்பொழிவு மற்றும் பயிற்சி உலக சாதனை முயற்சியாக நடைபெற்றது. மருத்துவ உளவியல் நிபுணர்கள் பாபு ரங்கராஜன் மற்றும் ரோஜா ரமணி ஆகியோர் தலைமையில், மனஅழுத்த மேலாண்மை, உணர்ச்சி நுண்ணறிவு, தலைமைத்துவ திறன், உளவியல் நல்வாழ்வு உள்ளிட்ட 13 தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை கல்லூரியின் மனநலம் மற்றும் மனமகிழ்ச்சி மன்றம், கலாமின் உலக சாதனைகள் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஜிம்கானா இணைந்து நடத்தியது. நிகழ்வில் பேசிய முதல்வர் முனைவர் தேவி பிரியா, “உடல் நலம் போன்று மனநலமும் அவசியம். மாணவர்கள் மனஅழுத்தத்திலிருந்து மீள சிறந்த பயிற்சிகள் அவசியம்,” எனக் குறிப்பிட்டார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாணவர் விவகார பிரிவு தலைவர் முனைவர் ரவி மற்றும் செயலர் மணீஸ் ஒருங்கிணைத்தனர். யூடியூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
Next Story

