தூய பனிமய மாதா திருவிழா 26ஆம் தேதி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

X
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 443-வது ஆண்டு பெருவிழா வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வருகிற 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சிலுவை சிற்றலாயத்தில் இருந்து மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி நடக்கிறது. தொடர்ந்து 26ஆம் தேதி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் கொடியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு கூத்தன்குழி அருள்தந்தை ஆல்பர்ட் ஜான்சன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. ஆக.3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவப் பவனி நடக்கிறது. ஆக.5-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசீர் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழா ஏற்பாடுகளை ஆலய அதிபர் ஸ்டார்வின் தலைமையில் உதவி பங்குதந்தை பிரவீன் ராசு, களப்பணியாளர் மிக்கேல் அருள்ராஜ், சவேரியான இயேசு சபையினர், லசால் அருள் சகோதரர்கள், அடைக்கல அன்னை, அமலவை அருள்சகோதரிகள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பக்த சபையினர், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story

