அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்கள் மீது போலீஸார்  வழக்குப் பதிவு!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருதினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, மதுபோதையில் அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த க. முருகேசன்(22) என்பவர் மாண மாணவிகள் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரைப் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறிய பள்ளியின் ஆசிரியர் திருநாவுக்கரசை முருகேசன் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற தலைமை ஆசிரியர் கோவிந்தன் உள்ளிட்ட ஆசிரியர்களையும் தாக்க முயன்றதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம். பின்னர் அங்கு வந்த அவரது நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டாராம்.இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோவிந்தன் அளித்த புகாரைத் தொடர்ந்து ஆலங்குடி போலீஸார் முருகேசன் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக வெண்ணாவல்குடி அரசுப்பள்ளிக்குச் சென்ற அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயந்தி தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story