மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டும் 3 சக்கர ஸ்கூட்டர் வழங்காத மாவட்ட அலுவலர்

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம் கோரிக்கை
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி.பாஸ்கரன், தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மேல மருதூர் மூலக்கரை ஊராட்சி கரகமருதூரில் வசிக்கும் தருமையன் என்பவரது மகன் முருகதாஸ். மாற்றுத் திறனாளி. இவர் 3 சக்கர ஸ்கூட்டர் வாகனம் வேண்டி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலருக்கு விண்ணப்பித்தார். இவருக்கு, 3 சக்கர ஸ்கூட்டர் வாகனம் 2024 -ம் ஆண்டே தர வேண்டும். ஆனால், இன்று வரை தர வில்லை. நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலருக்கு, சென்னை ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் முருகதாசுக்கு, உடனடியாக வாகனம் தரும்படி கூறி உள்ளனர். ஆனால், நாகை மாவட்ட அலுவலர் இன்று வரை தர வில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அலுவலக நிலை எப்படி என்று விசாரித்த போது, ரூ.20 ஆயிரம் சங்கம் மூலமாக பணம் தரும் நப்ர்களுக்கு தான் வாகனங்கள் தரப்படுகிறது என்று பல மாற்றுத் திறனாளிகள் கூறி உள்ளனர். பணம் தருபவர்களுக்கு மட்டுமே வாகனம் தரப்படுகிறது என்பது வேதனையான உண்மை. தகுதி உடைய பல ஏழை எளிய மாற்றுத் திறனாளிகள் வாகனம் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளி முருகதாசுக்கு, 3 சக்கர வாகனம் கிடைக்க சென்னை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை போல, விண்ணப்பித்து வாகனம் கிடைக்காமல் வேதனையில் உள்ள பல ஏழை எளிய மாற்றுத் திறனாளிகளுக்கும் வாகனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக. தவறு செய்யும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story