சேலத்தில் வாலிபர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது

X
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). இவர் மணக்காடு மெயின் ரோட்டில் காபி பார் நடத்தி வருகிறார். அவருடைய கடைக்கு நேற்று 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் விக்னேசிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.850-யை பறித்து சென்றனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் விக்னேசியிடம் பணம் பறித்தது ஜான்சன்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (26), ஞானவேல் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் ரூ.1,000 பறித்ததாக கொண்டலாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Next Story

