தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

பலி
தஞ்சாவூர் மாவட்டம்,  மருதகுடி ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது என கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருவிழா நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திருவேங்கப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் 5 ஆம் வகுப்பு மாணவன் மாதவன் (10). செந்தில் என்பவரின் மகன்  5 ஆம் வகுப்பு மாணவன் பாலமுருகன் (10 ). ஸ்ரீதர் என்பவரின் மகன் 2 ஆம் வகுப்பு மாணவன்  ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.  வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட 3 பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுதுதான் அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடன் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவில் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபொழுது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவல் அறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் மற்றும் வல்லம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குளத்தில் ஆழம் அதிகமாக இருந்துள்ளது. குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.
Next Story