தஞ்சாவூர் - வேங்கராயன்குடிக்காடு இடையே 30 ஆண்டுகளாக இயக்கப்பட்ட மினி பேருந்தின் சேவை குறைப்பால் பொது மக்கள் அவதி

X
தஞ்சாவூர் - வேங்கராயன்குடிக்காடு இடையே 30 ஆண்டுகளாக இயக்கப்பட்ட மினி பேருந்தின் சேவை குறைப்பால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு மினி பேருந்து சேவை அறிவிக்கப்பட்ட 1995 ஆம் ஆண்டு முதல், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திருந்து வேங்கராயன்குடிக்காடு கிராமத்துக்கு மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சேவையால் நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, நா.வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு, வேங்கராயன்குடிக்காடு கிராம மக்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்த மினி பேருந்து சேவையின் காரணமாக கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தினமும் நகர்ப்பகுதிக்கு வந்து செல்லவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்ற இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்த மினி பேருந்து அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 10 நடைகள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நாள்தோறும் ஏராளமானோர் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட மினி பேருந்தின் வழித்தடத்தை தஞ்சாவூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். அதிலிருந்து இந்த மினி பேருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேங்கராயன்குடிக்காடு செல்வதை தவிர்த்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கும், குந்தவை நாச்சியார் கல்லூரிக்கும் மாற்று வழித்தடத்தில் சென்று வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் மினி பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, 30 ஆண்டுகளாக வேங்கராயன்குடிக்காடு கிராமத்துக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவையை முழுமையாக கிராமப்புறத்துக்கே இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மாலை வேங்கராயன்குடிக்காடு கிராமத்துக்கு வந்த மினி பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து தங்களது கோரிக்கையை பேருந்து இயக்குபவர்களிடம் கூறினர். அதற்கு பேருந்து பணியாளர்கள் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து, சிறிது நேரத்துக்கு பின்னர் பேருந்தை இயக்க அனுமதித்தனர். இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது: "மினி பேருந்து திட்டம் அறிக்கப்பட்ட நாள் முதல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் ஊருக்கும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வந்த மினி பேருந்து தற்போது காலையில் இரு நடைகளும், இரவு இரு நடைகளும் மட்டுமே இயக்கப்படுகிறது. இதர நேரங்களில் பல்வேறு பணிகளுக்காக சென்று வருவோர் மினி பேருந்து சேவை இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே முன்பு இயக்கப்பட்டது போல் எங்கள் பகுதிக்கு நாள் முழுவதும் மினி பேருந்தை இயக்க வேண்டும்" என்றனர்.
Next Story

