காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!

X
தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கியதாக இளஞ்சிறார் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர், வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் மகன் ஆகாஷ் (20). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் உறவினரான சந்திரன் என்பவர், நான் திருமணம் செய்ய உள்ள பெண்ணை நீ எப்படி காதலிக்கலாம் என்று கூறி ஆகாஷை கையால் தாக்கினாராம். இதையடுத்து ஆகாஷ் தனது சித்தப்பாவுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக காரில் சென்றாராம். அப்போது சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் காளிதாஸ் (எ) சஞ்சய் (22), அம்பேத்கர் நகர் ஆரோக்கியதாஸ் மகன் ஹரிபிரசாத் (22), தேவராஜ் மகன் சந்தோஷ் குமார் (21), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து அவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஆகாஷ் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இளஞ்சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரனை தேடி வருகின்றனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய சப் இன்பெக்டர் ரத்னவேல் பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

