திருவையாறு அருகே அடிமனை சங்கம் - சிபிஎம் போராட்டத்தால் 4 குடும்பத்தினருக்கு மனைப்பட்டா வழங்க அலுவலர்கள் உறுதி

X
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் கிராமம் வடக்குத் தெருவில் உள்ள நான்கு வீடுகளை இடித்து அப்புறப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பிற துறை அலுவலர்களுடன் புதன்கிழமை காலை வந்தனர். இதில், ஒரு வீடு இடிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வந்த ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற 3 வீடுகள் இடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. மாற்று இடம், பட்டா கொடுத்து விட்டு, பின்னரே வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து, சுமார் 2 மணி நேரம் நடந்த இப்போராட்டத்தை தொடர்ந்து, அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவையாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, திருவையாறு வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் அறநிலையத்துறை அலுவலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அடிமனை சங்கத்தினர், சிபிஎம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் 19ஆம் தேதிக்குள்ளாக பாதிக்கப்படும் அனைத்து வீடுகளுக்கும் மாற்று இடம், அதற்குரிய பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார். இப்போராட்டத்தில் அடிமனை சங்க மாவட்ட செயலாளர் எம்.ராம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் கதிரவன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர். 20 தினங்களுக்கு முன் இது போன்ற நடந்த போராட்டத்தால் 6 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால் கண்டியூரில் நிலவி வரும் குடியிருப்பு அடிமனை பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமாக தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

